Wednesday 26 December 2018

மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !


இன்றும் மறக்க இயலவில்லை! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வடுக்கள் எண்ணங்களை விட்டு மறைந்த பாடில்லை. எதிர்பார்க்கா அலையாய் என் வாழ்வில் வந்து போனது அந்த சுனாமியின் கோர அலை.
2௦௦4 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் !
அதற்கு முந்தைய நாள் வரை சுனாமி என்னும் பெயரையோ ! இயற்கை சீற்றம் என்ன என்பதையோ நினைத்து கூடப் பார்க்கத் தெரியாத வயது ! இன்றும் நன்றாக நியாபகம் இருக்கிறது ! அன்று கிறிஸ்துமஸ் முடிந்த மறுநாள்!
வீட்டில் உள்ள எல்லோரும், எல்லோரும் என்றால் தாத்தா, பாட்டி, சித்தி, பெரியம்மா, அம்மா, அப்பா, அண்ணா, அக்கா என்று கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நபர்கள் இருப்போம். அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த வேளை. நான் அந்த கிறிஸ்துமஸ்காக கேரள மாநிலத்தவர்கள் அணியும் வெள்ளை நிறப் பட்டுப்பாவடையை ஆசையாக அணிந்து வலம் வந்து கொண்டிருந்தேன். புது உடை என்பதைத் தாண்டி அந்த உடையின் மீது எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு. ஆசை ஆசையாய் வாங்கியிருந்தேன். ஆனால் அன்று தான் அந்த உடையை நான் முதலும் கடைசியுமாக உடுத்தியது.
ஆம்! சரியாக காலை ஒரு ஒன்பது மணி இருக்கும் ! வேளாங்கண்ணி கோவிலில் தங்கியிருந்த நாங்கள் அன்றைய நாளில் அங்கே சமைத்து, சாப்பிட்டு விட்டு வருவதாக உத்தேசித்து வீட்டிலிருந்து சமைப்பதற்கு தேவையான எல்லாமே கொண்டு சென்று இருந்தோம். ஆனால் அன்று சமைக்கவும் இல்லை ! சாப்பிடவும் இல்லை ! ஆம் அங்கு இருந்த ஆயிரக்கணக்கான உயிர்களை அந்த அலை அதற்குள் விழுங்கியிருந்தது.
காலை சாப்பாட்டை முடித்து விட்டு நானும் என் தம்பியும் விளையாட்டில் மூழ்கி இருந்தோம். ஓரமாக குவித்து வைக்கபட்டிருந்த மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தோம். என் இரண்டு அண்ணன்களும் அவர்களுக்கு தெரிந்த கிரிக்கெட்டில் மூழ்கியிருந்தனர். என் அப்பாவும், பாட்டியும் அன்று சமைக்க தேவையான பொருள்களை வாங்க கடற்கரைக்கு கிளம்ப ஆயதமாயிருந்தனர்.
இதோ! எல்லோரும் கத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர். என்ன என்று யாருக்கும் புரியவில்லை. சொன்னால் புரிந்துகொள்ளும் வயதும் இல்லை. சொல்லி புரிய வைக்க யாருக்கும் நேரமும் இல்லை. அம்மா அப்பா என்று யாரையும் கூப்பிட முடியவில்லை. இதோ அலை நெருங்கி வருகிறது. ஐயோ! ஒரு தென்னை மர உயரத்துக்கு எழும்பி நின்ற அலையை முதலும், கடைசியுமாக கண்ட காட்சி இதோ இன்னமும் என்னால் மறக்க இயலவில்லை.
அந்நேரம் பார்த்து எனக்கு பூ வைக்க வந்த என்னுடைய சித்தி என் கைகளை பிடித்து இழுத்து கொண்டு ஓடுகிறார். என்னுடன் என் தம்பியும், வாய் பேச முடியா என் அண்ணனும்!
இன்னொரு அண்ணன் எங்கே?
தெரியவில்லை!
அம்மா அப்பா?
யாருமே எங்கே என்று தெரியவில்லை?
என்னுடன் வந்த பதினைந்து நபர்களில் இப்பொழுது வெறும் மூவர் மட்டுமே!
நாங்கள் ஓடி சென்று ஒரு லாட்ஜில் ஏறிக் கொண்டோம். எங்களை தொடர்ந்து தண்ணீரும் முதல் மாடி வரை வந்து விட்டது. இதோ நாங்கள் இரண்டாம் மாடிக்கு அவசர அவசரமாய் ஓடுகிறோம்.
எங்கும் ஒரே அழுகுரல் ! யாருக்கும் ஒன்றும் புரியவில்லை! 
மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் ! 
எல்லாப் பக்கமும் தண்ணீர் சூழ்ந்துவிட்டது ! இனி நடப்பது நடக்கட்டும் அழுவதைத் தவிர வேறு வழியில்லை என்று புரிந்துவிட்டது. அம்மா அப்பா அண்ணன் என்று எல்லோரையும் தொலைத்து விட்டேன். இதோ தனியாய் நிற்கிறேன்! எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு அருகில் சித்தி! இப்படியாக ஒரு அரை மணி நேரம் கழிந்தது! அந்த நொடி நினைக்கவில்லை என் அம்மாவையும் அப்பாவையும் மீண்டும் பார்ப்பேன் என்று!
வந்த அலை அமைதியாக கடல் திரும்பியிருந்தது. ஆனால் அது கொடுத்து சென்ற வலிகள்! அதை சொல்ல நிச்சயம் என்னிடம் வார்த்தை இல்லை!
எதிர்பாராவிதமாக எதிர் கட்டிடத்திலிருந்து வந்த என் அப்பா என்னைத் தூக்கி கொண்டு அழுகிறார். என் அப்பா அழுது பார்த்த முதல் நாள் அது ! என் அப்பாவைக் கட்டி கொண்டு என் அம்மாவை தேடுகிறேன். என்னை ஒருநாளும் பாப்பா என்று கூப்பிட்டு அறியாத அவன் பாப்பா என்று ஓடி வருகிறான்! அவனோடு என் அம்மாவும்! எங்கள் குடும்பத்தில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை!
ஆனால் எங்கு பார்த்தாலும் ஒரே சடலங்கள்! நிச்சயம் அத்தனை சடலங்களை ஒரே நாளில் பார்த்ததில்லை! இனி பார்க்கவும் விருப்பமில்லை! கோவிலின் கதவுகள் திறக்கப்பட அங்கே சென்று அடைக்கலம் புகுந்தோம். ஹெலிகாப்டரில் உணவுகள் கொடுத்தார்கள். ஆனால் அதை வாங்கி உண்ணும் அளவுக்கு யாருடைய மனதும் இடமளிக்கவில்லை. அத்தனை வலிகளை சுமந்து கொண்டு அகதிகளாய் நின்ற நாள் அது. ஆனால் வாழ்க்கையைக் குறித்த புதுவித வெறுமையை அந்த அலை சொல்லி சென்றது.
இதோ பொறுமையாய் நடையைத் துவங்கினோம். யாருக்கும் அலைபேசியில் தொடர்பு கொள்ள இணைப்புகளும் இல்லை. பயணத்தைத் தொடர வாகனங்களும் இல்லை. எல்லா அறிவியலும் தோற்றுப் போக பொடிநடையாக நடக்கத் துவங்கினோம். வரும் வழியெங்கும் பார்த்த உயிரற்ற சடலங்கள் இன்னும் மனத்தை விட்டு அகலவில்லை. உறவுகளோடு வந்து தனிமரமாய் எங்களுடன் நடந்தவர்கள் பலர். குழந்தையை இழந்து, மனைவியை இழந்து, கணவனை இழந்து, பெற்றோரை இழந்து சொந்த ஊர் நோக்கி புறப்பட்ட எங்களின் பயணம் வாழ்க்கையின் இன்னொரு முகத்தை இறுக்கமாய் காட்டி சென்றது. அன்றைய ஒரு நாள் வாழ்க்கையில் வராமல் போயிருந்தால் நன்றாக இருக்குமோ? இன்றும் தோன்றுகிறது.
இன்னும் வலிக்கிறது! ஆம் அங்கு எத்தனையோ உறவுகளைத் தொலைத்த உயிரின் மனம் படும் பாட்டை நினைக்க நினைக்க இன்னும் வலிக்கிறது.
அரசு வீடு கட்டி கொடுத்து இருக்கலாம்!
நிவாரணம் கொடுத்து இருக்கலாம்!
ஆனால் மாண்ட உயிரும், உறவும் இந்த மண்ணில் மீண்டும் திரும்ப வர போவதில்லையே?                 

                                                  

2 comments:

  1. No words. கண்களில் கண்ணீர் மட்டும்.

    ReplyDelete
  2. என் வாழ்வின் கருப்பு தினம்.....

    ReplyDelete

மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !

இன்றும் மறக்க இயலவில்லை ! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வ...