Friday 19 May 2017

தலாக் முறை

இன்று காலையிலிருந்து என் மனத்தை உறுத்தும் ஒரு விஷயம் தலாக் முறை ...
ஒரு மதத்தை பற்றி விமர்சிக்கவோ அல்லது குறைகூறவோ எனக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம் . ஆனால் அதுவே ஒரு பெண்ணுக்கு இந்த சமுகம் விளைவிக்கும் கொடுமை என்னும் பட்சத்தில் அதை பற்றி பேசாமல் இருப்பது அதை விட கொடுமையாகும் ,
மதத்திற்கும் , எனக்கும் எவ்வித மனத்தாங்கலும் இல்லை . இப்பொழுது நான் கூறப்போகும் விஷயங்கள் மூலம் நான் யார் மனதையும் புண்படுத்தவும் விரும்பவில்லை . அதன் கொள்கையையும் , அதன் விளைவையும் சாடியே பேச விளைகிறேன் .
உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒரு காலத்தில் முக்கிய சடங்காக இருந்து இன்று அது இந்திய மண்ணில் முற்றிலும் ஒழிக்கப்பட்டு முற்போக்கு எண்ணம் வளர்ந்ததன் முக்கிய காரணம் சட்டங்களும் , அதை நிலைநாட்ட பலர் மேற்கொண்ட அரிய முயற்சிகளுமே காரணம் . அதை போன்ற சிறு முயற்சியே இது .
தலாக் என்றால் என்ன ?
இஸ்லாமிய கொள்கையின் படி , தலாக் என்பது விவாகரத்துக்கு இணையானது .
தலாக் என்றால் ” விடுவித்தல் “ என்று பொருளாகும் .
இதில் முத்தலாக் என்றால் மூன்று முறை தலாக் சொல்வது . பலர் இதை ஒரே நேரத்தில் சொல்வது என்று பொருள் கொள்கிறார்கள் ஆனால் முத்தலாக் வழக்கத்தின்படி ஒரு பெண்ணின் மூன்று மாதவிடாய் கால இடைவெளியில் மூன்று முறை தலாக் சொல்ல வேண்டும் . முதல் இரண்டு தடவைகளும் வாய்ப்புகளே!!! மூன்றாவது முறையும் அவர் அப்படி சொல்லும் பட்சத்தில் இருவரும் விவாகரத்து பெற்றவர்கள் ஆவர் .
அதன் பிறகும் இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட மனத்தாங்கலை விடுத்து சேர்ந்து வாழ முற்பட்டால் அது இஸ்லாமிய கொள்கையின் படி பாவமான காரியமாகும்.
வேண்டுமானால் அந்த பெண் இன்னொரு ஆண் மகனுடன் திருமணம் செய்து கொண்டு முத்தலாக் பெற்றவுடன் வேண்டுமானால் மீண்டும் தன் முதல் கணவருடன் சேர்ந்து வாழ முடியும் .
அந்த மூன்று மாத கால இடைவெளியும், அந்த இடைப்பட்ட காலமும் அந்த பெண் கருவுற்றதை கண்டறிய தான் ... ஒருவேளை அந்த பெண் கவுற்றதை அறிந்து அந்த ஆண் இரண்டு தலாக்கிற்கு பின்னும் சேர்ந்து வாழ முடியும் . ஆனால் அது அந்த ஆணின் விருப்பத்தை சார்ந்தது .
இதுவே தலாக்கை பற்றி குரான் கூறுவதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறுபவை .....

மேற்கூறியவற்றைக் கொண்டே இந்த சட்டம் ஆண்களுக்கானது என்பது தெளிவாக விளங்கும் . அதாவது ,
“ முள்ளில் சேலை மாட்டினாலும் , சேலையில் முள் மாட்டினாலும் பாதிப்பு சேலைக்கே ... “ என்பது போல் இந்த சட்டத்தின் பாதிப்பு முழுவதும் பெண்களுக்கு தான் . தலாக் ஒரு ஆண் , பெண் விவாகரத்துக்கான சட்டம் என விளக்கினாலும் ,
இஸ்லாமை பொறுத்த வரை திருமணம் ஒரு ஒப்பந்தமே தவிர நிரந்தரம் இல்லை
என விளக்கம் கூறினாலும் அதில் பெண் ஒரு பகடையே தவிர ஆடுவிப்பவர்கள் ஆண்கள் என்பதையே இச்சட்டம் சுட்டுகிறது .
மூன்று முறை தலாக் கூறினாலும் அது ஆண்களின் விருப்பத்தையே பிரதிபலிக்குமே தவிர , பெண்ணின் உணர்வுகளுக்கு அங்கு மதிப்பில்லை. ஆண் வேண்டாம் எனும் பட்சத்தில் அந்த பெண் ஒரு பயனில்லா பொருள் ஆகிறாள் . சட்டங்களும் ,மதங்களும் மனிதனை நெறிப்படுத்தவும் , பக்குவப்படுத்தவும் உண்டானவை . ஆனால் அது ஒரு கண்ணில் வெண்ணையும் , மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் காட்டும் பட்சத்தில் உரிமைக் கேட்டு போராடும் குரல்களுக்கு செவி சாய்ப்பது அரசின் கடமையாகும் .
இந்தியாவின் பன்முகத் தன்மை இன்றளவும் கொடிகட்டி பறப்பதன் காரணம் , அது சட்டங்களை தாண்டிய மனிதத்தையும் , உணர்வையும் தன் தீர்ப்பின் மூலம்  நிலைநாட்டி கொண்டு இருப்பதாலே ....
சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிக்கும் சமயத்தில் அதுவும் இந்து மத கொள்கைகளை மீறுவதாகவே கருதப்பட்டு இருக்கும் . ஆனால் அந்த சட்டம் என் அம்மாவையும் , அக்காவையும் , என் மனைவியையும் அவர்கள் விரும்பாத சிதையிலிருந்து மீட்டது என்று நினைக்கும் பொழுது அச்சட்டத்தின் நோக்கம் அனைத்து இந்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று புலப்பட்டது .
அதுபோல தலாக் சட்டம் இஸ்லாம் மத உணர்வை அவமதிப்பதாக கருதாமல் உங்கள் தங்கையோ , மகளோ யாரோ ஒருவரிடம் முத்தலாக் பெற்று இந்த சமுகத்தில் அவமதிக்கப்படும் அவலத்தை மனதிற் கொண்டு தலாக்கை தடை செய்யும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டுகிறேன்.
நம் மதம் தாண்டிய இஸ்லாம் மத சகோதரிகளின் உணர்வுக்காக இதை சமர்ப்பிக்கிறேன் .

இப்படிக்கு ஒரு இந்தியன்         

Wednesday 17 May 2017

தாகம் தீராதா ?

தாகத்தோடு எழுத முயன்று என் தாகத்தை கண்ணீர் கொண்டு தீர்க்க விளைந்ததன் வருத்தம் …………………….
மூன்று போகம் விளைவித்து ஊர் வாழ கலப்பை ஏந்திய கைகள்!     நிவாரண நிதி வாங்க கைகள் ஏந்த தொடங்கியுள்ளன……
வந்தாரை வரவேற்று விருந்தளித்து உபசரித்த தமிழினம் அண்டை மாநிலத்தவரிடம்  நீருக்காக மல்லுக்கட்ட தொடங்கி உள்ளது….
குழாயடிச் சண்டைகளும் , பிள்ளைப்பேரை எதிர்பார்க்கும் கர்ப்பிணி போல தண்ணீர் லாரியின் வரவை எதிர்பார்க்கும் நகர ( நரக ) வாழ்க்கையும்  விதியாக மாறியுள்ளது
ஊற்று நீரில் விவசாயம் செய்து வளம் கொழித்த நிலங்கள் 1௦௦௦ அடி போர் போட்டும் தண்ணீர் இல்லா அவலம் தலை காட்டத் தொடங்கி உள்ளது….
குடிக்கும் நீரை கொண்டு வியாபாரம் செய்யும் அளவுக்கு தண்ணீரின் விலை குதிரை கொம்பாக மாறியுள்ளது .. போகும் போக்கைப் பார்த்தால் நீரின் விலை தங்கம் , வெள்ளி விலையை போல் அரசாங்கம்  நிர்ணயிக்க வேண்டி இருக்கும் போல  ..
காசில்லதோருக்கு அது எட்டாக் கனியாயிருக்கும்!
காசிருப்போருக்கு அது பற்றாக்குறையாயிருக்கும்!
இந்த தண்ணீரின் முக்கியத்துவம் உணர்ந்தே கரிகால் சோழன் காவிரிக்காக கல்லணையை கட்டி , கரைகள் வெட்டி , நீர்பாசனத்துக்கான வழியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காட்டி சென்றான் . அந்த சோழனின் எழில் மிகுந்த ஊரே எங்கள் ஊர் . அந்த குடகு மலையில் ஊற்றெடுக்கும் அழகு மங்கை ,தமிழ் மண்ணில் மருமகளாக புக்ககம் புகுந்து வழியெங்கும் வளம் ஈன்று செழிக்கச் செய்யும் காவிரி படுகையே எங்களின் அழகிய கிராமம் ….
ஆற்றங்கரையோர பள்ளி ! வீட்டிற்க்கு பின் வயல்வெளி !விடுமுறை நாளின் ஆற்றுக் குளியல் ! ஆற்று மீன் வறுவல் ! தலைவாழை இலை சாப்பாடு என ஒவ்வொரு விடுமுறை நாளும் கொண்டாட்டம் தான் ! மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க போகிறார்கள் எனும் செய்தி சொன்னதுமே பக்கத்து வீட்டு அக்கா,  எதிர் வீட்டு அண்ணா, சித்தப்பா பசங்க , பெரியப்பா பசங்க என்று ஒரு கூட்டமே ஆற்றங்கரையில் கூடிவிடும் ! தண்ணீர் பக்கத்து ஊருக்கு வந்துடுச்சு , தண்ணீர் இன்னும் 5 நிமிஷத்துல வரும்… 1௦ நிமிசத்துல வரும் என தொடர் அறிவுப்புகள் வந்துகொண்டே இருக்கும். அந்த நீரை கண்ட மாத்திரத்தில் எத்தனையோ கனவுகள் , எத்தனையோ எதிப்பார்ப்புகள் ! தண்ணீர் வந்த சில நாள்களில் எல்லோரும் அக்கரையில் உள்ள வயல்களுக்கு ஆற்றை கடந்து மாட்டை ஓட்டி சென்று வயலை உழ ஆரம்பித்து விடுவர் . அவர்கள், அவர்கள் வேலையை செய்ய… நாங்களோ ! மீன் பிடிக்க தூண்டில் செய்வதும் , பொறி வாங்குவதும் , கால்வாயில் பதுங்கும் நண்டுகளை பிடிப்பதும் , வாய்காலில் ஓடும் பாம்புகளை வேடிக்கை பார்ப்பதுமாக திரிவோம்.
தாத்தாவிடம் கெஞ்சி அக்கரைக்கு அழைத்து போக சொல்லி , சைக்கிளில் முன்னாடி அமர்ந்து கொண்டு தாத்தா அது வாங்கி தா! இது வாங்கி தா! எனப் பட்டியல் போடும் போது “ தண்ணி வந்துடுச்சுல்ல ! இன்னும் கொஞ்ச நாள்.. விளைச்சல பாத்ததும் எல்லாம் வாங்கி தரேன் “ என்பார் தாத்தா பாசம் பொங்க..
வயலில் கிடைத்த வருமானம் மட்டுமே கொண்டு தன் மூன்று மகனை கரைசேர்த்த அந்த தத்தா “ இந்த வருடம் தண்ணி வராது போலடா ! நெல்ல விதச்சுட்டேன். தண்ணி பாச்சனும் 1௦௦௦ ருபா இருந்தா தாடா “ என என் அப்பாவிடம் கேட்ட போது அந்த முதியவரின் கண்கள் ஈரத்தை மறைத்து கொள்ள முயன்றன …..
அதே ஊரின் இன்றைய நிலைமை இது தான் !
ஆற்றில் மணல் மட்டும் தான் மிஞ்சியுள்ளது . அந்த மணலையும் சுரண்டி எடுக்கப்பட்டு கட்டிடமாக்க ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது .மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வருவது கொஞ்சம் கொஞ்சமாக காணமல் பொய் கொண்டிருக்கிறது. கோவில் குளங்கள் , வாய்க்கால்கள் எல்லாம் தூர்வாரப் படாததால் குப்பை கூளங்களாக மாறிவிட்டன. வீட்டுக்கு பின்னால் உள்ள வயல்களுக்கு எல்லாம் விலை நிர்ணயம் செய்தாயிற்று.   இன்றைக்கு பெரும்பாலோனோர் உழவை விட்டுவிட்டனர் ( விற்றுவிட்டனர் ). இப்பொழுதே மதகு , கண்மாய் என்ன என்று கேட்கும் தலைமுறை இருக்க , நாளை ஆறு , ஏரி , குளங்களை வரைபடங்களிலும் , திரை மானிகளிலும் படமிட்டு காட்டவேண்டிய நிலை நிச்சயம் வரும் …வரலாறில் மறைந்து போன சரசுவதி நதியை போல , மற்றவைகளும் மறைந்து போகலாம் நீர்பாசனங்களை இப்பொழுதும் மீட்டு எடுக்காமல் இருப்போமாயின் ………
நீர்நிலைகளின் இன்றியமையை உணர்ந்தே கங்கையை சிவனிமிடமிருந்தும் , நதிகளை பெண்களாக போற்றியும் , குளங்களை கோவிலுக்குள் வெட்டியும் அதன் புனிதத் தன்மை போற்றினர் நம் முன்னோர் . ஆனால் அதனை நாம் தொழிற்ச்சாலை கழிவுகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் , சாயப் பட்டறைகளுக்கும் கூறு போட்டு விற்றுக்கொண்டிருக்கிறோம் . எஞ்சியுள்ள நீர்பாசனங்களையும் , நன்னீரையும் இழந்து சென்னையைப் போலவே சிறு இயற்கை பேரிடரையும் சந்திக்கும் திறனிழக்க துணிந்து விட்டோமா என்ன ?
ஏனெனில் கிரிக்கெட்டின் சர்வதேச கோப்பைகளை விடவும் , சினிமா நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்வதை விடவும் , முகநூலில் லைக் வாங்குவதை விடவும் இது முக்கியமல்லவா ?
காரணம் நம்மால் தாகத்திற்கு தண்ணீரை மட்டுமே குடிக்க முடியும் ….

இலஞ்சம் இன்றி வாழ முடியுமா ?

இலஞ்சம் இன்றி வாழ முடியுமா ?
எனும் கேள்விக்கு அசட்டுத்தனமாக முடியும் என்று பதில் கூறினாலும் , முடியாது என்பதே நிதர்சன உண்மை. மனித வாழ்வு என்பது சமுக வாழ்வு , காரணம் மனிதன் ஒரு சமுக உயிரி. ஆம் , இந்திய சமுகமே கையூட்டால் கை கட்டிபோட்டது போன்று உள்ளது எனும் போது நாம் மட்டும் இலஞ்சத்தை தவிர்க்க முடியாது என்பதே உண்மையை அறிந்தோரின் கூற்று.
நவீன கணக்கெடுப்பின்படி , 175 நாடுகளைக் கொண்ட ஆய்வில் இந்தியாவிற்கு கையூட்டில் 76 வது இடம் . அதாவது தெற்கு ஆசியாவிலே பூடானுக்கு அடுத்தப்படியாக 2 வது இடம் சிறப்பு பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இப்படி எழுத உனக்கு வெக்கமா இல்லையா ? என இங்கே பலக்குரல் குமுறலாம். ஆனால் உண்மை நிலை இப்படி அல்லவா இருக்கிறது.
  இந்தியா இன்னும் ஏழை நாடாகவே உள்ளது. ஏனெனில் , மற்ற நாடுகளில் கடமையை மீறினால் கையூட்டு . ஆனால் இந்தியாவில் கடமையை செய்வதற்கே கையூட்டு ! “
என்ற இந்தியன் பட வசனத்திற்கு கை தட்டாத கைகளும் உண்டா ! ஆனால் நிலைமை வேறு !
இன்றிக்கு சாதி சான்றிதழ் வாங்குவதில் தொடங்கி , சாலை போடுவது வரை இலஞ்சம் தான் . கிராம பஞ்சாயத்துக்களில் தொடங்கி பாராளுமன்றம் வரை கையூட்டு தான் . ஆட்சியளர்கள் மாறலாம் ! ஆட்சி மாறலாம் ! இலஞ்சம் மட்டும் மாறது ! ஊழல் மட்டுமே நிலையானது ! என்பது இன்றைய அரசியல் சாசனத்தில் எழுதப்படாத வரைமுறைகள் !
இன்றைக்கு ஒவ்வொரு அரசு அலுவகத்திலும் அரசு அதிகாரிக்கு இலஞ்சம் பெற்று தரவே அரசு நியமிக்காத ஒரு அரசாங்க ஊழியராக ஒரு இடைத்தரகர் இருக்கத்தான் செய்கிறார்... அவர்தான் உண்மையில் அரசாங்கத்திற்கும் மக்களுக்குமான இடைப்பாலம் ! ஏனெனில் அவரை சார்ந்து தானே இலஞ்சத்தின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது!
இதெல்லாம் யாருக்கும் தெரியாத சிதம்பர ரகசியமா என்ன ? அப்படியேனில் இலஞ்ச ஒழிப்புத்துறையும் இலஞ்சத்துக்கு அடிமை என்று தானே அர்த்தம். நாங்களும் அரசாங்கத் துறைகளுள் ஒன்று எனக் காட்ட எப்பொழுதாவது 5௦௦, 1௦௦௦ வாங்கிய அதிகாரியிடம் தன் அதிகாரத்தை காட்டும்.
ஆனால், ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும் கோடிகளை விழுங்கி எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்தவர்கள் , கோடிகளில் புரள்வது எப்படி என யாருக்கும் தெரியாது போல் !
நாட்டின் வரிப்பணம் முழுவதும் வரியில்லா பணமாக சுவிஸ் வங்கியில் பதுங்கியிருப்பதை நாடே அறியும் ! ஆனால் யாரென்று பாவம் அந்த அரசாங்கத்தலே அறிய முடியாத இல்லை இல்லை சொல்ல முடியாத அவல நிலையை என்னவென்று சொல்வது ...
தேர்தலுக்கு 539 கோடி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை ! அவ்வளுவும் அரசாங்க பணம் என்றால் உரிமம் எங்கே ? உரிமம் இல்லை மர்மமே இன்னும் தொடர்கிறது .ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் அமரர் ஊர்தி இலவசமாம். ஆனால் , சமிபத்தில் மருத்துவமனையில்  இறந்த மனைவியை கணவனும் , மகளும் 1௦ கி.மீ தூரத்தில் உள்ள மயானத்திற்கு எடுத்து சென்றது ஏன் என நான் சொல்லவும் வேண்டுமோ?
அரசாங்க வேலை பெறுவதற்கு தரும் பணத்தை இப்படி இலஞ்சம் வாங்கி தான் ஈடுகட்ட முடிகிறது . இப்படி கடை நிலை ஊழியன் முதல் கவர்னர் வரை இலஞ்சம் பெறாத மகான்களே இல்லை எனலாம் இந்த திருநாட்டில்.
ஒவ்வொரு வருடமும் இன்ஜினியரிங் , மெடிக்கல் சீட் வாங்க இலட்சம் முதல் கோடி வரை நன்கொடை பெறப்படுகின்றன. அந்த கல்லூரிகள் அரசாங்கத்துக்கு கொடுக்கும் இலஞ்சம் மூலம் தரம் பெறுகின்றன.
சான்று ( சேத்தன் பகத் : REVOLUTION 2020 )
தரம் அற்ற கல்லூரிகளில் படித்த மாணவர்களின் தலைவிதி தலைகீழாய் மாறி போகிறது.
சமீபத்தில் நீட் தேர்வு அமல்படுத்திய பிறகு அரசாங்கத்தால் ஒரு அமர்வு குழு ஏற்படுத்தப்பட்டு தரமற்ற கல்லூரிகளை தடை செய்ய வேண்டி ஒரு அறிக்கை வெளியிட்டது. ஆனால் அந்த அமர்வு குழு அரசாங்கத்தால் ஏற்கனவே தரமற்றதாக நிர்ணயம் செய்யப்பட்ட கல்லூரியை தரமானதாக்க போராடுகிறது . காரணம் ???
இதன் விளைவு ஆசைமிக்க பல திறமைமிக்க கிராமப்புற மாணவர்களின் கனவுகள் இவர்களின் கையூட்டலால் கரைந்து போகிறது.
இன்றைய காவேரி பிரச்சனையை கோலாகலமாக , அரசியல் பின்னணியோடு , அரசியல் பலத்திற்காக அடித்தர மக்களை கொண்டு அமர்க்களப்படுத்தி வருகிறார்கள். ஆனால் பாலம் கட்டுவதற்கும் , தூர்வாருவதற்கும் கொடுத்த நிதியெல்லாம் முழுவதும் பயன்படுத்தி இருந்தால் தண்ணீர் பஞ்சமே வந்திருக்காதே!
எதிர்கட்சி வெள்ளத் தடுப்பு நடவடிக்கையை விரும்பி அழைக்கிறது. கூவம் நதியை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட 1௦௦௦ கோடியை மாதிரியை ஆய்வு செய்யவே செலவிட்டு இருக்கிறார்கள்.ஒருவேளை கூவம் நதி தூர்வாரப்பட்டு இருந்தால் வெள்ளம் இல்லை இல்லை மழைநீர் அதன் போக்கிலே அழகாக போய் விடுமே !
“ நாகரிகம் தொடங்க வித்திட்ட ஆறுகள் இன்று நாதியின்றி மணல் கொள்ளையால் மேலாடை பறிக்கப்பட்டு மானம் இழந்து நிற்க காரணமும் இந்த இலஞ்சத்தால் தான் ! “
உண்மையாக சொல்லப்போனால் என்னை போன்றவர்களுக்கு தேர்தல் என்ற சொல்லே “ ஓட்டுக்கு பணம் “ எனும் வார்த்தையால் தான் பிரபலமானது. கொடுமை என்னவெனில் என் பக்கத்து வீட்டு அத்தை சொல்கிறார் மேலத்தெருவில் ஒரு ஓட்டுக்கு 5௦௦ ரூபாயாம் நமக்கு எல்லாம் 25௦ ருபாய் தான் என வருத்ததோடு சொல்வதை கேட்கும் போது செங்குருதி சிந்தி வந்த சுதந்திரமும் , குடியரசும் 5௦௦ , 1௦௦௦ க்கும் ஒவ்வொரு ஊரிலும் விற்கப்படுகிறது.
அப்படி எனில் நீ மட்டும் இதற்கு விதிவிலக்கா எனக் கேட்டால் இல்லை என்பது தான் நிஜம். இந்தியன் படம் மாறி தனித்து நின்று இதை சாதிக்க யாருக்கும் விருப்பமும் இல்லை , நேரமும் இல்லை.. அன்னா ஹசாரே போன்று போராட உறுதியும் இல்லை.
ஆனால் எனக்கு உரைத்த ஒரு விஷயம் இந்தியா முழுவதும் 2௦௦௦ க்கும் மேற்ப்பட்ட IAS அதிகாரிகள் பதவியில் இருக்க சகாயத்தை மட்டும் ஒரு கூட்டம் பின்தொடர காரணம் என்ன ? காரணம் எல்லோரிடமும் நானும் நேர்மையானவனாக , நல்லவனாக , சமூகத்துக்கு என்னால் முடிந்த நல்லது செய்ய வேண்டும் எனும் ஆசை உள்ளது. ஆனால் , சூழ்நிலைக்கு நாம் ஒவ்வொருவரும் அடிமையாகி நாம் மட்டும் நேர்மையாய் இருந்து என்ன சாதிக்க போகிறேன் என்று எல்லோரும் விழுந்த வலையில் நாமும் விழுகிறோம் .
எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன் ,
நிச்சயம் சகாயம் ஐயா அவர்களின் நேர்மை 1௦௦௦ இளைஞரையாவது கவர்ந்திழுத்திருக்கும் , அதில் 1௦௦ இளைஞராவது அரசாங்க அதிகாரியாகவோ , சமூகத்தை இயக்குபவர்களில் ஒருவராகவோ இருக்கலாம் . அதில் 1௦ பேராவது நேர்மைக்கு இலக்கணமாய் இலஞ்சத்திற்கு எதிராய், சமுக சிந்தனையோடு வாழலாம். அது நீயாகவோ நானாகவோ கூட இருக்கலாம்.  ஒருவேளை நமக்கும் இதுபோன்ற 1௦௦ பேர் கொண்ட கூட்டம் உருவாகலாம். என்ன கொஞ்சம் காலதாமதம் ஆகலாம் .
நீயும் நானும் மாறத் தயார் எனில் ,
இலஞ்சம் கொடுக்காமலும் , வாங்காமலும் , மக்கள் பணத்தை மக்களுக்காக செலவிட தயார் எனில் இது சாத்தியமே !
“ நீ விரும்பும் மாற்றத்தை உன்னில் உருவாக்கு !
 பின் உலகமும் நீ விரும்பியபடி மாறும் கூடிய விரைவில் “
எனும் நம்பிக்கையோடு ,
இர . ஏஞ்சலின் ரெனிட்டா

எது காதல் ?

நாம் என்ன தான் 21 ஆம்  நூற்றாண்டில் வாழ்ந்து வந்தாலும் , என்ன தான் நாகரிக முன்னேற்றம் அடைந்தாலும் நம் மத்தியில் காதலின் மீதான விமர்சனங்களுக்கு எவ்வித குறைவும் இல்லை !!! காதலின் மீதான சமுகத்தின் பார்வையும் மாறவில்லை !!!
காதலின் மீதான வாதங்களையும் விவாதங்களையும் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு வினாக் குறியோடு தான் நாம் பயணித்து கொண்டு இருக்கிறோம் .
எனது சிறு வயது முதலே எனக்கு ஒரு சந்தேகம் ?
“ காதலுக்கான இலக்கணம் தான் என்ன ? “
கண்ணும் கண்ணும் கவிதை பேச ;
மனம் இரண்டும் உலகை மறக்க ;
சுற்றி உள்ள சூழ்நிலைகள் கவிதை பாட ;
வாழ்வின் உன்னத உறவை கரம் பிடிக்க மனம் உண்டாக்கும் துடிப்பே காதலா ?
இல்லை காதலுக்கு தான் இலக்கணம் என்ன ?காதல் என்பது ஒருவரது வாழ்க்கையில் ஒரு முறை தான் உருவாகும் உணர்வா ?
இல்லை எனில் அதன் வரைமுறைகள் தான் என்ன ?
இங்கு இல்லை எனும் விடை கிடைக்கும் போதே “ ஒருவனுக்கு ஒருத்தி தான் “ என்னும் இலக்கணம் பொய்யோ என்னும் வினாவும் தவறாமல் என்னுள் எழுகிறது .
“ ஒருத்தனுக்கு ஒருத்தி என்று விதித்தது யார் ? “ இதை ஒருத்திக்கு ஒருத்தன் என்று கூறுவதே முறையாக இருக்கும் .
புரியவில்லையா ?
கூறுகிறேன் கேளுங்கள் ;
கதைகளிலும், இதிகாசங்களிலும் ஒரு ஆண்மகனுக்கு எத்தனை காதலிகள் வேண்டுமானால் இருக்கலாம் . அரசகுல இலக்கணப் படி அவன் ஒரு வசதியான பெண்மகளை தன் மனைவியாக்கி பட்டத்து மகராணி ஆக்குகிறாள் . ஆனால் தன் ஆசைக்கு உட்பட்ட மகளிரை அந்தபுரத்து நாயகி ஆக்குகிறான் . இதற்கு வரைமுறைகள் விதிமுறைகள் இல்லை அவனுக்கு . ஆனால் அந்த அந்தபுரத்து நாயகிகள் எத்தனாவது நாயகியாக இருப்பினும் கணவனே கண் கண்ட தெய்வம் கல்லானாலும் கணவன் ; புல்லானாலும் புருஷன் ; என்று வாழ வேண்டும் என்பதே விதிமுறை .
இப்பொழுது சொல்லுங்கள் தமிழ் விதிப்படி ஒருவனுக்கு ஒருத்தியா ? இல்லை ஒருத்திக்கு ஒருத்தனா ?
இந்த இடங்களிலே நீங்கள் காதலுக்கு காட்டும் இலக்கணங்கள் பொருளற்று போகிறதே ? மெய் காதலென நீங்கள் காட்டும் உதாரணங்கள் பொய்யாகி போகிறதே ?
பைபிளில் ஒரு வரி உண்டு :
யாரும் இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய இயலாது ; ஏனெனில் அவன் ஒருவரை விலக்கி மற்ற ஒருவருக்கு பணிவான் ;
இதே நிலை தான் இங்கும் ;
நீங்கள் கூறலாம் , “ இன்னும் நீ இலக்கிய இலக்கங்களை முழுமையாக அறியவில்லை . காதலுக்கும் கற்ப்புக்கும் எத்தனையோ உதாரணம் சங்க இலக்கியங்களில் உண்டு என்று “ நிச்சயம் அதை என்னால் மறுக்க முடியாது .
ஆனால் ஒரு சமுகத்தின் கட்டமைப்பு இப்படி தான் இருந்தது என்று அவை சுட்டிகாட்டும் போது அந்த ஒரு சில உதாரணம் எவ்வித தாக்கத்தை தரும் என்று யோசித்து பாருங்கள்… நாம் எல்லோரும் எவ்ளோ பெரிய முட்டாள்கள் என்று……………….
காதலின் சின்னம் தாஜ்மஹாலே எத்தனை முட்டாள் தனமான காதலை தன்னுள்ளே புதைத்து கொண்டு உள்ளது என்று தெரியுமா ?…
ஷாஜகானின் 14 வது மனைவியே மும்தாஜ் ; அவ்வாறு இருக்க 14 மனைவி மீது கொண்ட காதல் தான் அளப்பரியது என்றால் அந்த 13 மனைவிகள் அவருக்கு யார் ? அந்த 13 மனைவிமார்களின் குழந்தைகள் அன்பின் சின்னங்கள் இல்லையா ? அந்த 13 மனைவிகள் மேல் அவர் காதல் கொள்ளவில்லையா ? இங்கே காதலின் இலக்கணம் என்ன ? எது காதல் ?
தமிழ் கடவுள் முருகனின் உண்மை காதலி யார் ? இங்கே அவருக்கு யாரிடம் உண்மையான காதல் ஏற்பட்டது ? வள்ளியிடமா? இல்லை தெய்வனையிடமா ?
மேலை நாட்டு கலாச்சாரப்படி யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் விருப்பப்படி வாழலாம் எனில் கடைசி வரை கூட வருவதே காதல் என்னும் இலக்கணம் என்ன ஆனது ?
இவ்ளோ படித்த உங்களால் இதை விளக்க இயலுமா ?
இதுவரை பழம்கதை பேசினோம் ….
இன்றைய காதல் கட்டமைப்புக்குள் வாருங்கள் ;
இன்றைய காதல் என்றதும் நாம் நாம் எல்லோரும் சாட விரும்பவது சாதி கொலைகள் , கௌரவ கொலைகள் , பெண்ணின் மீதான காதலின் திணிப்பு என்ற சமுக பிரச்சனைகளை தான் , என்னை பொறுத்தவரை இன்றைய தலைமுறையின் காதலே ஒரு சமுகப் பிரச்சனை என்பது என் தீர்மானம் .
திரைப்படங்களில் சொல்லப்படும் காதல் கதைகளை உண்மை என்று நம்பி இன்றைய சமுகம் தவறான வழியில் சரியாக பயணித்து கொண்டு இருக்கிறது .
திரைப்படங்களை பொறுத்த வரை காதல் என்பது திருமணம் வரை தான் காட்டப்படுகிறது . கஷ்டப்பட்டு அந்த காதலர்கள் சேருவதே பெரும்பாலான திரைப்படங்களின் கருவாக உள்ளது
காதலின் பயணம் திருமணத்தோடு நின்று விடுகிறதா ? அதை சாதித்தால் எல்லாம் சரியாகி விடுமா என்ன ?
காதலின் பயணம் திருமணம் என்னும் பந்தத்தில் தொடங்குகிறதே தவிர முடியவில்லை… வாழும் வாழ்க்கையை வாழ்வது மணமக்களாகினும் அது வெறும் அந்த இருவரை சார்ந்தது அல்ல என்பதே நிதர்சனம் .
இன்றைய பெரும்பாலான காதலர்கள் சொல்லும் வசனம் ,
“ எனக்கு பிடித்தவளை / பிடித்தவனை என் வாழ்க்கை துணையாக்க யாருடைய சம்மதமும் எனக்கு தேவை இல்லை , உங்கள் விருப்பம் இல்லாவிட்டலும் நான் அவளை / அவனை திருமணம் செய்தே தீருவேன் “
இதெல்லாம் படங்களில் கைத்தட்டல்களை தரும் ஹீரோவின் வசனங்கள் தான் .
ஆனால் நிஜம் வேறு … நிழல் வேறு ….
திருமணம் செய்த பிறகு தாம் என்ன செய்ய போகிறோம் என்றே பெரும்பாலான காதலர்களுக்கு தெரிவதில்லை .
15 வயதில் ஒருவனை/ஒருத்தியை காதலித்து , 2 வருடம் ஆகும் முன்னே பிரேக்அப் என்று கழற்றி விட்டு , அவன்/அவள் நமக்கு சரி பட்டு வரமாட்டார்கள் என்று அடுத்தவர்களை தேடி போகும் அளவில் தான் இன்றைய காதல் கதைகள் உள்ளன . இது எங்கோ நடக்கும் நிகழ்வுகள் அல்ல . நம் உடன் படிக்கும் நண்பர்கள் , உடன் வேலை செய்பவர்கள் என் எல்லோரும் இப்படி தான் இருக்கிறோம் .
அப்படியே அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் பெரும்பாலான பெற்றோர்கள் ஏற்று கொள்வதில்லை . தன் பெற்றோரால் புறக்கணிக்கப் படும் நிலையில் , தன் குடும்பத்தினரை பெரும்பாலும் எந்த நிலையிலும் சந்திக்க இயலாமலும் , எந்த விசேஷங்களுக்கும் செல்ல முடியாமலும் , தன் கருவுற்று இருக்கும் நிலையில் தன்னை பெற்றவளின் அனுசரிப்பையும் , உற்றார் உறவினரின் அரவணைப்பையும் பெற முடியாமல் இவன் ஒருவனை / ஒருத்தியை கைப் பிடிக்க எல்லா உறவையும் பகைத்து கொண்டோமே என்று நினைக்காத மனங்கள் இல்லை எனலாம் .
இவை எல்லாம் என் நேரில் நான் அனுபவித்த உண்மைகள் .
எனக்கு ஒரு அப்பொழுது 13 , 14 வயது இருக்கலாம் . எல்லோர் போன்றும் எனக்குள்ளும் அந்த காதலின் ஈர்ப்பை உணரத் தொடங்கிய பருவம் அது .
எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு பெண்மணி இருப்பார் . அவர் மதம் மாறி காதல் திருமணம் செய்து கொண்டவர். தன் பெற்றோரை எதிர்த்து பதிவு திருமணம் செய்து கொண்டார்கள் . முதல் இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை திருமண பந்தம் சுமுகமாகவே சென்று இருந்துள்ளது . மிக மெதுவாகவே இருவரும் தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை உணரத் தொடங்கினர் . அன்றிலிருந்து வாழ்க்கை போர்க்களம் ஆகிறது . என்ன ஆனாலும் நான் உன்னை கை விட மாட்டேன் என்னும் காதல் வசனங்கள் எல்லாம் கரைந்து போகத் தொடங்கியது . அம்மாவிடமும் சொல்லி அழ முடியவில்லை , அப்பா மதிக்கவே இல்லை . பிள்ளைகளுக்காகவே அவர்கள் சேர்ந்து வாழ வேண்டிய சூழல் . சமுகத்தை எதிர்த்து , பெற்றோரை பகைத்து , உறவினரையும் இழந்து யாரும் இல்லா நிலைக்கு தள்ளப்பட்டனர் . அவர்கள் எப்பொழுதும் எங்களிடம் சொல்வது உண்டு .
காதல் வாழ்க்கை பருவத்தில் நன்றாக தான் இருக்கும் , ஆனால் அது பொருந்தாத ஒன்றாக போகும் போது வாழ்வே சூனியமாகும் . தெளிவின்றி நீ செய்யும் காரியத்தின் விளைவு மிக கொடியது என்று …
இது எதுவுமே புரியாமல் எனக்கு தெரிஞ்ச ஒரு 13 வயது பையன் தான் காதலிக்கிறேன் என்ற பொழுது சற்று அதிர்ந்து தான் போனேன் .அதுவும் எதற்காக என் கூட படிக்குற எல்லோரும் காதலிக்குறாங்க நான் மட்டும் சும்மா இருக்க கடுப்பாக இருக்கு என்று … காதலுக்கான காரணம் என்னை அச்சுறுத்தியது .
குழந்தைகளிடம் பக்குவத்தையும் ,புரிதலையும் உண்டாக்க வேண்டிய ஊடகங்கள் அவர்களிடம் காதலின் தவறான முகத்தினை காண்பித்து குழப்பத்துக்கு ஆளாக்குகின்றன . அதை திருத்த வேண்டிய கல்வி முறைகள் எதை பற்றியும் கண்டு கொள்வதில்லை .
உண்மையான காதல் ஒருவனின் பக்குவத்தை பொறுத்தே அமைகிறது . அழகும் , புறத் தோற்றமும் தாண்டி ஒரு தம்பதியாக அவர்கள் வாழ்வதற்கு இருவரின் மனப்பக்குவமே தேவையாகிறது .
இன்று பெரும்பாலனவர்களிடம் இந்த நூற்றாண்டில் தொலைந்து போன ஒன்று மன முதிர்ச்சி இல்லாமை .
சாதிய திருமணங்கள் சமத்துவத்தை விதைக்கலாம் உண்மை தான் , பிரச்சனை சாதிகளில் உள்ளது எனும் போது அதை திருமணம் மாற்றி விடாது . கணவனின் சாதி கடைசி வரை அந்த குழந்தையையும் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கும் சாதியை  கொண்டு செல்ல தான் போகிறது என்பதை நாம் ஏன் யோசிப்பதில்லை. சாதிய திருமணங்கள் செய்வோர் எல்லாம் எதையோ சாதித்தவர்கள் போன்று ஊடகங்கள் பேசினாலும் , அதை இந்த சமுகம் தனி மனித அளவில் அங்கீகரிக்கவில்லை என்பதே பெற்றோர்களின் காதலின் மீதான முட்டுக்கட்டைக்கு காரணம் .
எந்த பெற்றோரும் காதலுக்கு எதிரிகள் சத்தியமாக இல்லை , தான் இந்த உலகிற்கு தரும் விதை விருட்சமாவதை எந்த விவசாயியும் தடுக்கமாட்டான் . ஆனால் அந்த விருட்சத்தின் கிளை பூச்சியின் தாக்குதலுக்கு ஆளாகும் போது சிறு கிளையை கிள்ளி எறிவதன் மூலம் அந்த விருட்ச்சத்தை காக்கவும் தயங்க மாட்டான் .
சரியான ஒரு வாழ்க்கை துணையை சரியான பருவத்தில் தேர்ந்து எடுத்து இந்த சமுகத்திற்கு சிறந்த எதிர்காலத்தை தருவதே உண்மையான முதிர்ச்சி அடைந்த காதல் . ” யாரும் காதலுக்கு எதிரி இல்லை !!! இன்றைய அவசர காதலர்களுக்கே எதிரிகள் !!!… நானும் … ”
மேற்கூறியவாறு நான் எழுதியது பல்வேறு முரண்பாடுகளை தன்னுள்ளே அடக்கியது என்று எனக்கு தெரியும் . ஆனால் அவை எதுவும் இந்த சமுகம் காணாத பொய்கள் அல்ல என்று உங்களுக்கு புரியும் என நம்புகிறேன் .

பெய்யா மழை

எனக்கும் காதல்   தான் ......
அழகிய தென்றலாக உன்னை ஊடுருவி,
சிறு துளியாக ஓடையில் உருவாகி ,
மேடுபள்ளம்  கடந்து,
என் தாய் வீடு தொலைத்து,
மணாளனை காண வேண்டும் என்னும்  மையல்  மனதை உந்த,
தூரம் ஆயிரம் கடந்து,
தடைகள் பல உடைத்து,
அணைகள் பல தாண்டி,
சோலைகள் பல செழிக்கச் செய்தாலும்,
உன் செம்மேனி தரும் சிலாகிப்பை அனுபவிக்க,
உன் ஆண்மை திறம் கண்டு வெட்கப்பட,
உன் கடல் என்னும் சந்நிதியில் எந்நிலை இழந்து நீயே நானாகி,
உன்னிலே சரணாகி ...
மீண்டும் ஆவியாகி மறுபிறப்பு எடுத்து உன்னையே அடைய வேண்டும் என்று ...

எனக்கும்  ஆசை தான் .......
உன் விதைகளின் ஊடாக ஓடி விளையாட வேண்டும் என்றும் ...
நீ வெட்டிய வரப்புகளில் என் பயணம் தொடர வேண்டும் என்றும்...
உன் நாற்றுகளில் என் மேனி தழுவி சிலிர்க்க வேண்டும் என்றும்...
உன் கதிர்மணிகள் என்  மேனியில் அதன் முகம் கண்டு வெட்கப்பட்டு தலைகுனிவதை காண வேண்டும் என்றும் ...
என்னையே கொடுத்து நெல்மணியாக உருப்பெற்று ,
உன் பொங்கல் புது விழாவில் பொங்கலாக பொங்கி,
உன் வாழ்வை பொங்கச் செய்யும் வேண்டும் என்றும் ...

எனக்கும் ஏக்கம்  தான் ........
வேர்த்து விறுவிறுத்து வீடுத் திரும்பும் வீர ஆண்மகனின்  தாகம் போக்கும் வரம் கிடைக்காதா என்று  ?
சங்கு போன்ற கழுத்து உடைய  மங்கையின் இடுப்பு குடத்து நீராகும் வரம் கிடைக்காதா என்று ?
இது மேனியா இல்லை இல்லை இளம்பூவின் இதழா எனும் சந்தேகமுடைய  பிஞ்சு குழந்தையின் உடலை வருடும் வரம் கிடைக்காதா என்று ?
பலர் பாவம் போக்கும் புண்ணியவானாக பொங்கி எழும் வரம் கிடைக்காதா என்று ?
இந்த புண்ணியபூமியை பாவப் படுத்தும் ஆதிக்க அரசியலை ஒழிக்க வீறு கொண்டு எழும் வரம் கிடைக்காதா என்று ?
நான் வரவில்லை என சபிக்கும் உங்களுக்கு ,
" உங்களின் பொறுப்பற்ற தொழில்மயமாக்கப்பட்ட நகரமயமாக்கப்பட்டநாகரிகமற்ற வாழ்வே காரணம் எனும்  என் நிலை விளக்கும் வர வேண்டும் என்று ? "
கிடைக்குமா ?
என் காதல் கைகூடுமா ?
என் ஆசை நிறைவேறுமா ?
என் ஏக்கம் தீருமா ?
இப்படிக்கு ,
பெய்யா மழை

மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !

இன்றும் மறக்க இயலவில்லை ! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வ...